Monday, June 15, 2009

திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்




இராமானுசன் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆழ்வார் ஆசாரியார் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆண்டாள் திருவடிகளே தஞ்சம் என்றும் இறைவனைச் சரணடைவது போலவே இறையடியார்களையும் சரணடைவது முன்னோர் காட்டிய வழி. அந்த அடியவர்கள் காட்டிய வழி திருமகளான அன்னையை முன்னிட்டு எம்பெருமானைச் சரணடைவது. 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்று தொடங்கியே 'உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்றார் நம்மாழ்வார். அதே போல் நாயகி சுவாமிகளும் இந்தப் பாடலில் 'திருமங்கை மார்பன்' என்று தொடங்கி 'நீலமேகன் தஞ்சம்' என்றும் 'கோவலன் தாள் தஞ்சம்' என்று தஞ்சமடைந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அவனைத் தஞ்சம் அடைவதை விட அவனடியார்களைத் தஞ்சம் அடைவதே சரி என்று எண்ணி 'நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம்' என்று அடியார்களைத் தஞ்சமடைந்து இந்தப் பாடலை நிறைவு செய்கிறார்.

திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்
திருவரங்கத் தலமுடையோன் திருப்பதிகள் உடையோன் (திரு)


அருளே உருவான திருமங்கை யான மகாலட்சுமி தாயார் வாழும் மார்பை உடையவன் அவன். அவ்வருளின் வெளிப்பாடாக தன் திருவடிகளைத் தஞ்சமடைவதே உயிர் உய்ய வழி என்று காட்டிக் கொண்டு பொறுமையாக நிற்கிறான் திருமலைகள் ஏழும் உடையவனான திருவேங்கடத்தான். மலையேறி வந்து அவனைச் சரணடைய இயலாதவர்களுக்கு காவிரி கொள்ளிடம் என்னும் இரு ஆறுகளின் இடைக்குறையில் திருவரங்கத்தலமுடையோனாக நிலை கொண்டுள்ளான். இங்கெல்லாமும் சென்று அவனைத் தஞ்சமடைய முடியாதவர்களுக்கு தன் திருமேனியைப் பல திருப்பதிகளிலும் நிலை நிறுத்தியிருக்கிறான். அவனது அருளினையும் நீர்மையினையும் என்ன சொல்ல?

திருமங்கை மார்பன் என்றதால் அவனது பர உருவம் சொன்னார். திருப்பதிகளைக் குறித்ததனால் அவனது அருச்சை என்னும் சிலையுருவைச் சொன்னார்.


திருவவதாரம் ஈரைந்தும் செகதலத்தில் செய்தோன்
திருப்பாற்கடலைக் கடைந்து அமுத மழை பெய்தோன் (திரு)


யானையை யானைய்க் கொண்டு பிடிப்பது போல உலக உயிர்களை அவ்வுயிர்களின் தோற்றமே கொண்டு தான் நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவனது அருளின் திறத்தால் ஈரைந்து = பத்து திருவவதாரங்கள் இந்த பூமியில் செய்தான். இதனால் இறைவனின் விபவ உருவம் சொன்னார்.

திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது ஆமையாகவும் மோகினியாகவும் உருக்கொண்டு அமுத மழையைப் பெய்தான். இறைவனின் வியூஹ உருவத்தைத் திருப்பாற்கடலைச் சொன்னதன் மூலம் சொன்னார்.

திருக்கைகளாலே சிவன் தன் வில் இரண்டாய் உடைத்தோன்
திருமகளாகிய சீதாதேவியின் கை பிடித்தோன் (திரு)


இராமனாக அவதரித்த போது தன்னுடைய திருக்கைகளால் சிவதனுசினை இரண்டாக உடைத்து திருமகளே ஆன சீதாதேவியின் திருக்கைகளைப் பிடித்தவன்.

கோவர்த்தனம் ஏந்திய கையன் கோபால துய்யன்
ஆபத்து தீர்த்தருளிய நம் ஆயர் குலத்து ஐயன் (திரு)


கடும் மழை பெய்த போது 'குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்'. கோவர்த்தனம் ஏந்திய கைகளை உடையவன். பசுக்களைக் காப்பவன் - கோபாலன். தூயவன். ஆயர்குலத்திற்கு நேர்ந்த ஆபத்துகளை தீர்த்து அருளிய நம் ஆயர் குலத்துத் தலைவன்.

அங்கத்துடனே சகல ஆக்கைகள் உண்டாக்கும்
பங்கயத்து அயன் பணியும் பரமன் என்னைப் பார்க்கும் (திரு)


கைகால்கள் என்னும் எல்லா அங்கங்களுடன் உலகில் எல்லா உடல்களையும் உருவாக்கும் தாமரையில் வாழும் பிரம்மன் பணிகின்ற பரமன். என் மேல் கருணையுடன் பார்ப்பவன்.


சேலையை நீக்கி என்னைச் சேரும் சீலனைப் பாராய்
ஆலைக் கரும்பு அது போல நான் ஆனேன் அல்லல் தீராய் (திரு)


இது வரையில் தானான நிலையிலேயே பாடி வருகிறார் போலும் என்ற எண்ணம் தோன்றும் வகையில் பாடி வந்த நாயகி சுவாமிகள் இந்தத் தொடுப்பில் தான் நாயகியாகவே பாடி வருவதை மிக அழகாகக் காட்டிவிட்டார்.

எனக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் தடைகளை எல்லாம் (என் முயற்சியில்லாமல்) அவனாகவே நீக்கி என்னைச் சேர்ந்திடும் சீலன் அவன். இப்போது அவனைப் பிரிந்து பிழியப் பட்ட கரும்புச்சக்கையைப் போல ஆனேன் என் அல்லலைத் தீராய்.

அவரவர்கள் எண்ணம் போல் அநுக்கிரகங்கள் செய்யும்
சிவனுடைய செங்கையின் சிரமம் அதைக் கொய்யும் (திரு)


நான்குவிதமானவர்கள் என்னை வணங்குகிறார்கள்; அவர்கள் வேண்டியதை அவர்களுக்கு அருளுகிறேன் என்றான் கண்ணன். அதனைச் சொல்கிறார் இங்கே. அவரவர்கள் வேண்டியபடி அவர்களுக்கு அனுக்கிரகங்களைச் செய்பவன். பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் பிரம்மஹத்தி நீங்கி அவர் திருக்கரங்களில் ஒட்டியிருந்த காபாலம் விலகும்படி அருளியவன்.

துக்கங்களுக்கு இருப்பிடமாய்த் துலங்குதே என் நெஞ்சம்
நிற்க வைக்கக் கூடவில்லை நீலமேகன் தஞ்சம் (திரு)


உலகத்தில் இருக்கும் துக்கங்களுக்கெல்லாம் ஒரே இருப்பிடம் போல் ஆகிவிட்டது என் உள்ளம். ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை நெஞ்சத்தை. நீலமேகனே நீயே கதி.

நீவாத தீபமென முன்னின்றதே என் நெஞ்சம்
கோவர்த்தனக் குடை பிடித்த கோவலன் தாள் தஞ்சம் (திரு)


தூண்டிவிடாத விளக்கினைப் போல் ஒளிமங்கிக் கிடக்கிறதே என் நெஞ்சம். ஆயர்கள் துன்பம் தீர்க்கக் கோவர்த்தனக் குடை பிடித்த கோவலனே. நீயே தஞ்சம்.

ஆற்றங்கரைத் தீபமென அலைகுதே என் நெஞ்சம்
நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம் (திரு)


ஆற்றங்கரைக் காற்றில் அலைபாயும் விளக்குச்சுடரைப் போல் அலைகிறது என் நெஞ்சம். நாத்தழும்பேற அவன் திருப்பெயர்களைச் சொல்லித் துதிக்கும் நல்லவர்களின் திருவடிகளே தஞ்சம்.

இந்தப் பாடலை திரு. தொ.மீ. சௌந்தரராஜன் பாடி இங்கே கேட்கலாம்.

நாயகி சுவாமிகள் திருவடிகளே தஞ்சம்.

Thursday, June 04, 2009

அன்னம் புசி என்று உரையாதே அகன்று போடி


கோபியர்களும் ஆழ்வார்களும் கண்ணனின் பிரிவால் வாடி வாடிப் பாடிய பாடல்களை நாம் படித்திருக்கிறோம். 'ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி' என்று புலம்புவான் பாரதியும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த நாயகி சுவாமிகளும் அதே போன்ற உணர்வு கொண்டு அவன் பிரிவால் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். நடனகோபால நாயகி என்ற அவருடைய திருநாமத்திற்கு ஏற்றதொரு பாடல் இது. இந்தப் பாடலின் சில சரணங்களைத் திரு. தொ.மீ. சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) அவர்களின் இனிய குரலில் இங்கே கேட்கலாம்.

அன்னம் புசி என்று உரையாதே அகன்று போடி
அன்னம் விஷமாய் இருக்கிறது அறிந்து கொள்ளாய் நாடி (அன்னம்)


உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்களில் ஒருவராகக் கருதக் கூடிய நாயகி சுவாமிகளுக்கு கண்ணனின் பிரிவால் அன்னம் விஷமாக இருப்பது இயற்கையே. பாவம் தோழிகளாகச் சுற்றியிருக்கும் மற்ற உயிர்களான நமக்குத் தான் அது தெரியவில்லை. அன்னம் புசி என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.

புன்னை மரத்தடியில் பெண்கள் புலம்பச் செய்த சோரன்
என்னை மறந்தானோ இப்போது இக்குல உபகாரன் (அன்னம்)


புன்னை மரத்தடியில் மற்ற பெண்களைப் புலம்ப வைத்து அவர்களுக்கு அருள் செய்த அந்தச் சோரன் இன்று எனக்கருள் செய்யாமல் மறந்தானோ? அங்கே செய்த அதே லீலை இங்கும் செய்து எனக்கு அருள மாட்டானோ? அப்படி அவன் அருளினால் எனது ஏழ்படிகாலும் வீடு பெற்று உய்வோமே! என் குல உபகாரன் என்னை மறந்தானோ? - என்கிறார்.

ஆள் செய்யாமலே நாள் இங்கே அகன்று போகுதேடி
வாழ்விப்பான் என்றே இருந்தேன் மாயம் செய்தானேடி (அன்னம்)


அவனுக்கு ஆட்செய்யாமலேயே, தொண்டு செய்யாமலேயே நாட்கள் இங்கே நகர்ந்து போய்கொண்டிருக்கிறதே; அவனுக்கே ஆட்செய்தல் என்ற வாழ்வினைத் தந்து வாழ்விப்பான் என்றே ஒன்றும் செய்யாமல் காத்திருந்தேனே; மாயம் செய்துவிட்டானே - என்கிறார்.

தாக நீரேனும் கொள் எனச் சாற்றுகிறாய் இங்கே
தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே (அன்னம்)

அடடா. தாமோதரனைக் காணாது தாகம் அடங்குமோ இங்கே என்கிறாரே. என்ன ஒரு உணர்வு! தமரேஸ் தின்னு தமரேஸி; தாக் நீஸ்தெநு மோஸ் ஜாரியாசி; தாமோதரா தாமோதரா தொர தய கோன் கலம் அவய் தாமோதரா - ஓடுகின்றதே நாள் ஓடுகின்றதே; பயம் இல்லாதவர்கள் மோசம் போகின்றார்களே; தாமோதரா தாமோதரா உன் தயை எந்த காலம் வரும் தாமோதரா - என்று உருகியராயிற்றே.

சொல்லாதே அடைக்காய் அமுதால் சுகம் என்னேடி
எல்லாருக்கும் தெரியுமே என் இதயம் ஈதன்றோடி (அன்னம்)

உண்ணும் சோறு, பருகும் நீர் இவையெல்லாம் கண்ணன் என்று மேலே சொன்னார். அவை மட்டும் இல்லை தின்னும் வெற்றிலையும் கண்ணனே என்கிறார் இங்கே. தின்னும் வெற்றிலையாய், போகமாய், அவனே இருக்கும் போது வெறும் அடைக்காய் அமுதம் என்ன சுகம் தரும்? என் இதயம் தான் என்ன என்று உங்கள் எல்லோருக்குமே தெரியுமேடி என்கிறார்.

கண்ணேறு படும்படி எங்கெங்கே செல்கின்றானோ
நண்ணப் போய் அழைத்து வாடி நான் காணாது உய்வேனோ (அன்னம்)

நம்மாழ்வார் போல் பாடிக் கொண்டிருந்தவருக்கு கூடல் அழகன் நினைவு வந்துவிட்டது போலும். கூடல் மா நகரில் தானே விட்டுசித்தருக்கு எதிரே பெருமாள் வந்த போது அவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று பல்லாண்டு பாடினார். இங்கே என்னைத் தவிக்க விட்டுவிட்டு கண்ணேறு படும்படி இப்படி எத்தனை பேர் முன் போய் நிற்கின்றானோ? போய் அவனை அழைத்து வாடி என்கிறார்.

திடுக்குத் திடுக்கென என் நெஞ்சம் திகில் அடைகுது இங்கே
அடுக்கு முறி வெண்ணெய் கண்ணனுக்கு அமுது செய்வது எங்கே (அன்னம்)

கண்ணேறு படும்படி எங்கெல்லாம் சுற்றுகின்றானோ என்று எண்ணும் போதே எனக்கு திடுக் திடுக்கென்று நெஞ்சம் திகில் அடைகின்றதே. அவன் அப்படி கண்ணேறுபட்டு நோய் வாய்ப்பட்டால் அடுக்கு முறி வெண்ணெயை அவன் உண்ண முடியாதே என்று தவிக்கிறார். வெண்ணெய் நிறைய உண்டதற்கு மருந்தாக மண்ணை உண்டாயோ என்றார் நம்மாழ்வார். கண்ணேறு பட்டால் அந்த வெண்ணெயும் அமுது செய்ய இயலாதே என்கிறார் இவ்வாழ்வார்.

தயிர் கடையும் வேளை வந்து தழுவி விளையாடும்
மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் நாடும் (அன்னம்)

ஆழ்வார்களாய் பாடிக் கொண்டிருந்தவர் இங்கே கோபியரில் ஒருத்தி ஆனார் போலும். தயிர் கடையும் வேளையில் வந்து பின்னே தழுவிக் கொள்வானே. அந்த மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் விரும்பும்; ஆ ஆ என்று ஆராய்ந்து அருளும் என்று வியக்கிறார்.

மழை இல்லாப் பயிர் அது போல நான் மயங்குவேனோ வாடி
களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோடி (அன்னம்)

வானம் பார்த்த பூமியில் வாழும் பயிர்கள் போல் வேறொன்றும் கதியாக எண்ணாமல் அவன் அருளே முதற்பொருளாய் கொண்டு வாழும் நாயகி சுவாமிகள் மழையில்லாமல் வாடும் பயிர் போல் அவன் அருள் இல்லாமல் வாடுவதைச் சொல்கிறார். முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற்பொருள் ஆகவில்லையே என்று இருப்பார்கள் நடுவில் முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் போன்ற தன் முயற்சியால் அவனை அடைய இயலும் என்று அவ்வழிகளில் முயல்வார்களும் இருந்தால் அவர்களால் இவர்களும் மயங்குவார்களே. களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோ? ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று ஒரு நிபந்தனை இட்டிருக்கிறானே. அதன் படியல்லவோ நடக்க வேண்டும். என் முயற்சியால் அவன் அருளைப் பெற்றுவிடுவேன் என்ற எண்ணம் களையாக இருக்கிறதே; அதனை அவன் அருளால் நீக்க மாட்டானோ? அவன் அருள் என்னும் மழையை நோக்கும் பயிரான நான் தழைக்க மாட்டேனோ - என்கிறார்.

செழித்திருந்தேனே கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்
குழைத்துக் கிடக்கின்றன பார் குழக்கன்றுகள் எல்லாம் (அன்னம்)

அவனுக்கே தொண்டு செய்து கிடந்த போதெல்லாம் பசுங்கன்றில் ஒன்றான நான் செழித்துக் கிடந்தேனே. இப்போது அவன் அருள் அகன்று போக நானும் என்னை ஒத்த பசுங்கன்றுகளும் குழைத்துக் கிடக்கின்றன பார். கோபாலன் தீண்டினால் அல்லவா அக்குழக்கன்றுகள் மீண்டும் செழிக்கும் - என்கிறார்.

நடனகோபால நாயகி சுவாமிகள் திருவடிகளே அடைக்கலம்.